பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Thursday, May 8, 2014

பழக்கங்களின் ஆதிக்கம் - அத்தியாயம் – 3

M.I.T – ல் மூளை மற்றும் அறிவாற்றல் துறை பகுதிகளில் இருந்த ஆய்வகங்கள், ஒரு சாதாரண பார்வையாளருக்கு, குழந்தைகள் விளையாடும், ஒரு அறுவை சிகிச்சை பொம்மைகளைப்போல தோற்றமளிக்கும். சிறு கத்திகள், ரம்பங்கள், துளையிடும் இயந்திரங்கள் (ட்ரில்கள்), தானியங்கி இயந்திரங்களின் கைகளில் காணப்படும். ஒரு சிறிய அறுவை சிகிச்சை மேஜையும் உண்டு. பார்த்தால் டாக்டர் விளையாட்டு விளையாடும் குழந்தைகளுக்கு செய்ததுபோன்று அசப்பில் காணப்படும். அறையின் வெப்ப நிலையும் பதினைந்து டிகிரி சென்டிகிரேடு நிலையிலேயே கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். வெப்ப நிலையில் ஏற்படும் சிறு வேறுபாடும், அறுவை சிகிச்சை செய்யும், ஆராய்ச்சியாளர்களின் துல்லியத்தை மாற்றிவிடும் சாத்தியம் உள்ளது. ஆய்வகத்தில் மூளை நரம்பியல் விஞ்ஞானிகள், மயக்க நிலைக்கு உட்படுத்தப்பட்ட எலியின் கபாலத்தைத் திறந்து, அதில் சிறுசிறு உணர்வுக்கருவிகளைப் பதிய வைத்திருந்தனர். அந்தக் கருவிகள் எலியின் மூளையில் ஏற்படும் மிகச்சிறிய மாற்றங்களையும்கூட பதிவு செய்யவல்லது. எலிகள் கண்விழித்தாலும், சிலந்திவலைகளைப்போல பின்னப்பட்டு அமைந்திருந்த ஒரு டஜனுக்கு மேற்பட்ட உணர்வுக்கருவிகளை அவற்றின் தலையில் இருப்பதை உணராமல் இருந்தன.

இந்த ஆய்வகங்கள் பழக்கங்கள் உருவாக்கம்பற்றிய அறிவியலில் ஒரு அமைதியான புரட்சியையே ஏற்படுத்திவிட்டன. யூஜின் மட்டுமல்லாது, நான், நீங்கள், மற்றும் அனைத்து மனிதகுலமும் ஒவ்வொருநாளையும் கடக்கத் தேவையான பழக்கங்களை எப்படி உருவாக்கிக்கொள்கிறோம் என்று சோதனைமூலம் ஆராய்ச்சியாளர்கள் இங்கு நிரூபித்திருக்கிறார்கள். பல் துலக்குவது, காரை வீட்டிலிருந்து எடுப்பதுபோன்ற செயல்களை எப்படி பழக்கப்படுத்திக்கொண்டு செய்கிறோம் என்று, ஆய்வகங்களில் உள்ள எலிகளின் மீது செய்யப்பட்ட சோதனைகளைக்கொண்டு வெளிப்படுத்தியிருக்கிறார்கள். டாக்டர் ஸ்கொயரைப் பொறுத்தவரை, யூஜினுக்கு புதிதாய் பழக்கங்கள் எப்படி ஏற்பட்டது என்று அறிந்துகொள்ள இந்த ஆய்வகங்கள் உதவியது.

1990-களில் யூஜினுக்கு காய்ச்சல் வந்த அந்தக் காலகட்டத்தில்தான்,  பழக்கங்களின் உருவாக்கம் குறித்து ஆய்வுகள் நடந்தன. அவர்கள் அடித்தள நரம்புசெல் தொகுதிகள் (basal ganglia) எனப்படும் நரம்புத்திசுக்களில் மிகுந்த ஆர்வம் காட்டினர். மனிதனுடைய மூளையை ஒரு வெங்காயம்போல நினைத்துக்கொள்ளுங்கள். அப்போது மண்டையோட்டின் அருகில் உள்ள அடுக்குகளே, பரிணாம வளர்ச்சியின்படி கடைசியில் உருவான அடுக்குகளாகும். நாம் ஒரு புதிய கண்டுபிடிப்பைக் கொண்டுவந்தாலோ அல்லது ஒரு நகைச்சுவையைக் கேட்டு சிரித்தாலோ நமது மூளையில் இறுதியாக உருவான வெளிப்புற அடுக்குகளே அந்த சமயத்தில் வேலை செய்கிறது. அங்குதான் மிகவும் சிக்கலான சிந்தனைகள் பிறக்கின்றன.


மூளையின் உட்பகுதியில், மூளையும் தண்டுவடமும் சந்திக்கும் இடத்தில்தான், மூளையின் பழமையான கட்டமைப்புகள் உள்ளன. நாம் தன்னிச்சையாக செய்யும் செயல்களான மூச்சுவிடுதல், விழுங்குதல், பயமுறுத்தப்பட்டால் மேற்கொள்ளும் செயல்கள் போலானவைகளை இந்தப் பழமையாக கட்டமைப்புகள் கவனித்துக்கொள்கின்றன. மண்டையோட்டின் சரியான மையப்பகுதியில், ஒரு கோல்ஃப் பந்து அளவிலான அடித்தள நரம்புத்தொகுதிகள் உள்ளன. Basal Gangliaஎன்றழைக்கப்படும், முட்டை வடிவிலான செல்களைக்கொண்ட இந்தப் பகுதியை வெகு நாட்களாக ஆராய்ச்சியாளர்கள் நன்றாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால் பார்க்கின்ஸன் போன்ற மறதி நோய்களுக்கும், இந்த Basal Ganglia (B.G) – க்கும் தொடர்பு இருக்குமென்ற ஊகம் மட்டும் இருந்தது.


1990-களில் B.G- க்கும் பழக்கங்கள் உருவாவதற்கும் தொடர்புகள் இருக்குமென்றும் விஞ்ஞானிகள் ஊகித்தனர். B.G பகுதியில் காயமடைந்த விலங்குகள், எப்படி உணவுப்பெட்டிகளைத் திறப்பது, எப்படி உணவைக் குறுக்குவழிகளில் சென்றடைவது போன்ற காரியங்களை செய்ய முடியாமல் திணறின. ஆராய்ச்சியாளர்கள் புதிய, அணுவளவு சிறிய உணர்வுக்கருவிகளை, எலியின் மூளையில் பொறுத்தி, பழக்கங்களால் மூளையில் ஏற்படும் மாற்றங்களை பரிசோதனை செய்ய முற்பட்டனர். ஆய்வகத்தில், சிறிய அளவிலான கைகளால் இயக்கக்கூடிய கைப்பிடிகளுடன் (joy stick) கூடிய உணர்வுக்கருவிகளை டஜன் கணக்கில் எலிகளின் மூளையில் பொறுத்தினர்.
பிறகு எலியை படத்தில் கண்டவாறு T - வடிவிலுள்ள ஒரு சிறிய விளையாடும் கருவிக்குள் வைத்தனர்.



எலி ஒரு தடுப்புக்கு பின்புறம் நிறுத்தி வைக்கப்பட்டது. T – வ டிவத்தின் இடதுபுறம் சாக்லேட் இருந்தது. வலதுபுறம் வெறுமையாக இருந்தது. “டிக்” என்ற சத்தம் எழுப்பப்பட்டதும் தடுப்பு அகற்றப்பட்டது. சாக்லேட்டின் மணத்தை உணர்ந்த எலி அதனைத்தேடி T– வடிவத்துள் வந்து இடது அல்லது வலது புறத்துக்குச் சென்று உணவைக் கண்டுபிடித்து உண்டது. ஆரம்பச் சோதனைகளில் எலி உணவைத் தேடி எடுக்க நேரம் பிடித்தது. எலியை சாதாரணமாக அந்த சமயத்தில் பார்த்தபொழுது எந்த வித்தியாசத்தையும் காணமுடியவில்லை. எந்தவித பதற்றமுமின்றி உணவைத் தேடுவதுபோல் காணப்பட்டது.

ஆனால், எலியின் தலையில் இருந்த உணர்வுக்கருவிகள் வேறொரு முடிவைக் காட்டின. எலியின் மூளை, முக்கியமாக B.G  மிகவும் அதிகமாக வேலை செய்தது. உணவைத்தேடி எலி எந்த செயல் செய்தாலும், நுகர்தல், சுவற்றைப் பிராண்டுதல், அங்கும் இங்கும் பார்த்தல் போன்ற செயல்களின்பொழுது B.Gல் ஏகப்பட்ட நிகழ்வுகள் உணரப்பட்டது. சாதாரணமாக எலி உலவிக்கொண்டிருப்பதுபோல காணப்பட்டாலும், அதனுடைய  B.G ஒவ்வொரு செயலையும், தகவல்களாக பகுப்பாய்ந்து கொண்டிருந்தது.  B.G ல் ஏகப்பட்ட தகவல் பரிமாற்றங்கள் நடப்பதை உணர்வுக்கருவிகள் காட்டின.

இதே சோதனை நூற்றுக்கணக்கான முறை எலிகளிடம் மேற்கொள்ளப்பட்டது. ஆரம்ப சோதனையின்பொழுது தட்டுதடுமாறிக்கொண்டிருந்த எலிகள், நூற்றுக்கணக்கான முறைகளுக்குப்பிறகு “டிக்” ஒலியைக்கேட்டு தடுப்புக்கள் திறக்கப்பட்டவுடன், எந்தவிதமான தவறுகளும் இல்லாமல், நேராக உணவை நோக்கிச் சென்றன. ஆனால் அப்பொழுது B.Gல் ஆரம்பத்தில் நிகழந்த அதிகமான நிகழ்வுகள், மிகவும் குறைந்துவிட்டன. அதாவது எலிகள் சிந்திக்காமல் செயல்களைப்புரிய ஆரம்பித்துவிட்டது. தன்னிச்சையாக செயல்கள் நிகழும் அளவுக்கு மூளையின் தேவையற்று இருந்தது.


சோதனையின் ஆரம்பத்தில் எலிகளின் மூளைக்கு அதிக வேலை இருந்தது. அவற்றின் மூளை பரபரப்புடன் செயல்பட்டு, கிடைத்த அனைத்து துப்புகளையும் உபயோகித்து உணவை கண்டுபிடிக்க முயன்றது. ஆனால் எப்பொழுதும் இப்படித்தான் செல்லவேண்டும் என்று உணர்ந்து கொண்டதும், மூளை தன் செயல்பாட்டைக் குறைத்துக்கொண்டது. நிறுத்திக்கொண்டது என்றும் கூறலாம். எங்கு செல்லவேண்டும் என்ற செயலை மூளை B.G –ல் சேமித்து வைத்தது உணவுக்கருவிகளின் மூலம் கண்டுணரப்பட்டது. உயிரினங்களின் ஆதிகால மூளையின் பகுதியான B.G  பழக்கங்களை சேமித்து வைக்கும் இடமான பிறகு, மூளை தன் செயல்பாட்டை நிறுத்திவிட்டது. தன்னிச்சையான இயக்கங்கள், மூளையின் சிந்திக்கும் செயலை வீணடிக்காமல் B.G –ல் சேமித்து வைக்கப்பட்டு செயல்களாக்கப்படுகின்றது.


நமது மூளை தொடர்ச்சியான மீண்டும் மீண்டும் செய்யக்கூடிய காரியங்களை, கொத்துக்கொத்தாக சேர்த்து பழக்கங்களை உருவாக்குகிறது. இத்தகைய தொகுதிகளையே நாம் அன்றாட வாழ்வில் நம்பியிருக்கிறோம். காலையில் எழுந்தவுடன் நாம் தினசரி செய்யக்கூடிய செயல்களான டூத்பிரஷை எடுப்பது, பேஸ்ட் வைப்பது, பல்துலக்குவது போன்ற காரியங்கள் இத்தகைய செயல்களே. சிந்திக்க தேவையில்லாமல் அவை B.G –ஆல் தன்னிச்சையாக நடக்கின்றன. அந்த கணங்களில் மூளையில் சிந்திக்கும் செயல்பாடுகள் நடைபெறாது.


சாதாரணமாக காரை ரிவர்ஸ் பார்க் பண்ணுவதை எடுத்துக்கொள்ளுங்கள். கற்றுக்கொள்ளும் ஆரம்ப காலக்கட்டங்களில் நம் முழு கவனத்தையும் அதில் செலுத்தி ஒவ்வொரு செயல்பாட்டையும் சிந்தித்து உறுதி செய்தபிறகே செயல் புரிகிறோம். காலம் செல்லச் செல்ல நம்மை அறியாமல் எதையேனும் யோசித்துகொண்டே நம்மால் ரிவர்ஸ் பார்க்கிங்கும் செய்துவிட முடிகிறது. அதாவது பழக்கம் ஒன்று உருவாகிவிட்டது. சைக்கிள் ஓட்டுவது, நடப்பது போன்று அனைத்துப் பழக்கங்களையும் ஆரம்பத்தில் அதிகம் மூளையை உபயோகித்தே செய்கிறோம். கால ஓட்டத்தில் மூளை இச்செயல்களுக்காக சிந்திப்பதில்லை.

கோடிக்கணக்கான மக்களும் மிகவும் சிரமமான காரியங்களையும் எளிதாக செய்ய முடிவதற்குக் காரணம் பழக்கங்களே. காலையில் காரில் சாவியை வைப்பதற்கு முன்பே B.G  - தன் வேலையைத் துவங்கிவிடுகிறது. பழக்கங்கள் ஒரு நிலைக்கு உறுதியான பிறகு, நமது மூளை அமைதியாகிவிடுகிறது. அதனால்தான் காரில் சென்றுகொண்டிருக்கும்பொழுது, அலுவலகத்துக்கு இந்தப்பொருளை மறந்துவிட்டோம் போன்ற விஷயங்களை யோசிக்கும் அளவுக்கு அதில் இடமிருக்கிறது.



பழக்கங்கள் உருவாக முக்கியகாரணம், மூளை தன்னுடைய சக்தியை வீணடிக்க விரும்புவதில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். தனது கட்டுப்பாடுக்குள் இருக்கும் பாகத்திடம், பழக்கமாக உருவாக்கிய செயல்களைக் கொடுத்துவிட்டு மூளை தன்னுடைய சக்தியை வீணடிக்காமல் இருக்க முனைகிறது. சக்தியைச் சேகரிக்கும் இந்தத் தன்மை ஒவ்வொரு உயிரினத்துக்கும் நன்மையளிக்கிறது. மிகவும் திறமைமிக்க மூளைக்கு அளவில் சிறிய இடம் போதுமானதாக இருக்கிறது. அதனால் தலையின் அளவும் சிறுத்துவிடுகிறது. தலையின் அளவு குறைவதால் பிரசவம் எளிதாகி, குழந்தைப் பிறப்பின்பொழுது தாய்,சேய் உயிர் பிழைக்கும் சாத்தியம் அதிகமாகிறது. திறமை வாய்ந்த மூளை, நடப்பது, நிற்பது, சாப்பிடுவது, கார் ஓட்டுவது போன்ற செயல்களுக்கு சக்தியை வீணடிக்காமல் எதிர்காலம்பற்றி சிந்திக்கவும் செய்கிறது. புதிய புதிய சாதனங்களையும், வழிகளையும் கண்டுபிடிப்பதில் முனைப்பு காட்டுவது எளிதாகிறது. தன்னுடைய சக்தியை வளர்ச்சிக்கு உபயோகித்துக்கொள்கிறது.


பழக்கத்தை உருவாக்கி B.G  -இடம் கொடுத்துவிட்டு, மூளை அமைதியாக இருப்பதும் பிரச்சனையைக் கொண்டுவருவதற்கு வாய்ப்புகளும் உள்ளது. அமைதியாக இருக்கும்பொழுது, பழக்கத்தின் உதவியுடன் கார் ஓட்டிக்கொண்டிருக்கும்பொழுது திடீரென்று குறுக்கே ஒரு கார் வந்துவிட்டால் ஏடாகூடமாக ஆகிவிடாதா? அதனால், அதற்கும் B.G  - அறிவுக்கூர்மையுடன் செயல்பட்டு, எப்படிப்பட்ட சூழலில் செயல்கள் பழக்கங்களாக மாற வேண்டும் என்று தீர்மானிக்க சில வழிமுறைகளையும் கையாள்கிறது. ஒரு செயல் பழக்கமானால், அந்த செயலை ஆரம்பித்து ஏதோ ஒன்று நிகழ்வதை B.G    - குறித்து வைத்துக்கொள்கிறது.



-தொடரும்.



செய்தியும், காணொளிகளும்:

http://imgur.com/a/hgvUc 



10 comments:

  1. மூளை பழக்கங்களை உருவாக்கி Basal Ganglia விடம் கொடுத்துவிடுகிறது என்பதைக் கேட்க வியப்பாக இருக்கிறது.இன்னும் ஆய்வின் மூலம் என்னென்ன புதிய தகவல்கள் கிடைத்தன என அறிய காத்திருக்கிறேன்.

    காணொளிகள் நான்கையும் பார்த்தேன். ஓவியன் என்ற முறையில் அந்த வியத்தகு சிறுவன் Dusan Krtolica வின் ஓவியங்களை மிகவும் இரசித்தேன். மூன்றாவது காணொளியைப் பார்த்த ஒருவர் பின்னூட்டத்தில், அது முன்பே வரையப்பட்டிருக்கிறது என்று சொன்னதை கடைசி காணொளி அவர் சொன்னது சரியல்ல என்று நிரூபித்துவிட்டது. பொதுவாக படங்கள் வரையும்போது கண்களை கடைசியில் தான் வரைவார்கள். ஆனால் இந்த பையனோ முதலிலேயே கண்களை வரைந்து, வரைகின்ற விலங்கிற்கு உயிரூட்டம் கொடுத்துவிடுகிறார். காணக் கண்கொள்ளாக் காட்சி. பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா!
      சிறுவனின் ஆற்றல் மிகவும் வியக்கத்தக்கதுதான். அவன் ரப்பர் உபயோகிப்பதுபோல தெரியவில்லை. பென்சிலால் வரையாமல் பேனாவால் நேரடியாக வரைவதுபோல் உள்ளது. இதெல்லாம் ஒரு கொடுப்பினைதான்.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  2. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    ReplyDelete
  3. வியக்க வைப்பதை விட சிந்திக்க வைத்தது...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திரு.திண்டுக்கல் தனபாலன் அவர்களே !

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  4. ண்டையோட்டின் அருகில் உள்ள அடுக்குகளே, பரிணாம வளர்ச்சியின்படி கடைசியில் உருவான அடுக்குகளாகும். நாம் ஒரு புதிய கண்டுபிடிப்பைக் கொண்டுவந்தாலோ அல்லது ஒரு நகைச்சுவையைக் கேட்டு சிரித்தாலோ நமது மூளையில் இறுதியாக உருவான வெளிப்புற அடுக்குகளே அந்த சமயத்தில் வேலை செய்கிறது. அங்குதான் மிகவும் சிக்கலான சிந்தனைகள் பிறக்கின்றன.//

    சிந்திக்க வைத்த பதிவு. காணொளிகளை மத்தியானமாய்ப் பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி திருமதி.கீதா சாம்பசிவம். , சிந்தித்துப்பார்த்தால், உலகில் அனைத்து உயிரினங்களும் அதிசயமாகத்தான் தோன்றுகிறது.
      நேரமிருக்கும் பொழுது காணொளியைக் காணுங்கள். அந்த சிறுவனும் ஒரு அதிசயப்பிறவிதான்.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  5. எத்தனை சிக்கலான விஷயங்களையும் அருமையாக தமிழாக்கம் செய்து அளிக்கும் உங்களுடைய திறன் போற்றுதற்குறியது. இத்தகைய விஷயங்களை தமிழில் படிக்கக் கிடைப்பது மிக, மிக அபூர்வம் அதற்காகவே உங்களை பாராட்டலாம். இடப் புற மூளை வலப்புற மூளை என்றெல்லாம் மூளையின் செயல்பாடுகளைப் பற்றி கூறுகிறார்களே அதைப்பற்றியும் எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ஐயா! உண்மையில் தமிழை உயர்த்துவதும், தமிழ் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பைத் தருவதும் அரசாங்கத்தின் கடமை. ஆனால் பல்வேறு மொழிகள் கொண்ட நாட்டில் இருந்துகொண்டு இதனை சாதிப்பது இயலாது. என்னால் முடிந்தவரை என் திருப்திக்கு ஏதாவது மொழிமாற்றம் செய்ய முயற்சிக்கிறேன். பாராட்டுக்களுக்கு நன்றி ஐயா!
      நேரம் கிடைக்கும் பொழுது எழுதுகிறேன். ஒன்று மட்டும் கூற முடியும். இரண்டு கைகளையும் உபயோகப்படுத்துவது இரண்டு பக்க மூளைக்கும் மிகவும் நல்லது. வயதானவர்களுக்கு இது மூளைக்கு நல்ல உடற்பயிற்சி.

      அன்புடன்
      பக்கிரிசாமி நீலகண்டம்

      Delete
  6. எல்லாவற்றிற்கும் பழக்கம் ஒரு முக்கிய காரணியாகப் போய்விடுகிறது. எல்லாம் பழக்கதோஷம்தான் என்பது இதனால்தானோ என்னவோ?

    ReplyDelete