பாரதியார்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்.
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்.
துயரிலாதெனைச் செய்துவிட்டாள்.
துன்பமென்பதைக் கொய்துவிட்டாள்.

----பாரதியார்.

Thursday, August 28, 2014

பழக்கங்களின் ஆதிக்கம் - அத்தியாயம் – 19




கிட்டத்தட்ட அறுபதுபேர்கள் அங்கே கூடியிருந்தார்கள். தாய்மார்கள், மதிய உணவு நேரத்தில் வேலையிலிருந்து வந்திருப்பவர்கள், வயதாகி வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர்கள், உடலில் பச்சை குத்தியிருந்தவர்கள் என்று பலதரப்பட்டவர்கள் அந்த சர்ச்சில் நிகழ்ந்துகொண்டிருந்த உரையைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். உரையாற்றுபவரும் பார்ப்பதற்கு வெற்றிகரமான ஒரு அரசியல்வாதியைப்போலத் தோற்றமளித்தார்.


“என் பெயர் ஜான். நான் குடிப்பழக்கத்துக்கு அடிமையாக இருந்தவன்.” “ஹலோ ஜான்” கூடியிருந்தவர்களும் முகமன் செலுத்தினர்.


“என் மகன் கை முறிந்தபொழுதுதான், முதன்முதலில் நான் குடிப்பழக்கத்தை விடவேண்டுமென்று முடிவு செய்தேன்.  எனக்கு, குடும்பத்துக்கு வெளியே ஒரு பெண்ணிடம் தொடர்பு இருந்தது. ஒரு நாள் அந்தப்பெண், தன்னை இனி தொடர்புகொள்ள வேண்டாம் என்று கூறினாள். வெறுப்பில் ஒரு நண்பனுடன் சேர்ந்து மதுக்கடைக்கு சென்றேன். கொஞ்சம் குடித்தேன். அந்த நண்பன் சென்றதும், இன்னொரு நண்பனுடன் சேர்ந்து இன்னும் குடித்தேன். பிறகு என் மகனை பள்ளியிலிருந்து அழைத்துவரச் சென்றேன். அந்தத் தெரு எப்பொழுதும் நான் வழக்கமாக காரில் செல்லும் தெருதான். மகனை அழைத்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பிய பொழுது, என்னால் காரை என் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியாமல் ஒரு சைன்போர்டில் மோதிவிட்டேன். மதுவின் மயக்கத்தில் இருந்ததால், என் மகனுக்கு சீட்பெல்ட் போடவும் மறந்திருக்கிறேன். மோதியதில், மகன் காரின் முன் கண்ணாடிவரை தூக்கியெறியப்பட்டுவிட்டான். கார் ஒரே ரத்தமாகக் காட்சியளித்தது. நான் மிகவும் பயந்துவிட்டேன். அந்த நிமிடத்தில் நான் குடிப்பழக்கத்திலிருந்து வெளிவர உதவியை நாடவேண்டும் என்று முடிவெடுத்தேன்.”


“ஒரு க்ளினிக்-க்கு சிகிச்சைக்குச் சென்றேன். எல்லாம் நல்லவிதமாக முடிந்தது. கிட்டத்தட்ட பதிமூன்று மாதங்கள் மதுவைவிட்டு விலகியிருந்தேன். குடிப்பழக்கம் என் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது என்று பெருமையாக நினைத்தேன். அதற்கப்புறம் க்ளினிக்-க்கு சிகிச்சைக்கு செல்வதை நிறுத்திவிட்டேன்.”


“ஒரு நாள் நான் அலுவலகத்தில் வேலையிலிருந்தபொழுது என் அம்மாவிடமிருந்து அவசரமாக ஃபோன் வந்தது. அம்மாவுக்கு புற்றுநோய் மிகவும் முற்றியநிலை என்று தெரிய வந்தது. ஃபோனில் பேசியபிறகு நேராக மதுக்கடைக்கு சென்றேன். மீண்டும் குடிக்க ஆரம்பித்துவிட்டேன். தொடர்ந்து குடித்ததால் இரண்டு வருடங்களில் என் மனைவி என்னைவிட்டு விலகிவிட்டாள். ஒருமுறை என் மகனை நான் அழைத்துக்கொள்ள வேண்டிய நிலை வந்தது. குடித்துவிட்டு காரை ஓட்டிக்கொண்டு சென்றுகொண்டிருந்தேன். என்ன நடந்தது என்று தெரிவதற்குள் கார் எங்கேயோ மோதி நசுங்கிவிட்டது. என்மேல் எந்தக் கீறலும் விழவில்லை. என் மகன் உட்காரவேண்டிய சீட் சுத்தமாக நசுங்கியிருந்தது. நான் திரும்பிவரும்பொழுது இந்த் விபத்து நிகழ்ந்திருந்தால் என் மகன் பிழைத்திருக்க வாய்ப்பே இருந்திருக்காது. பதறிவிட்டேன். குடியை நிறுத்தவேண்டுமென்று மீண்டும் முடிவுசெய்தேன்.”


“குடிப்பழக்கத்திலிருந்து மீள, எனக்கு உதவி செய்ய வந்தவரிடம், குடிப்பழக்கம் என்  கையை மீறிய நிலையில் உள்ளது என்று கூறினேன். அதைப்பற்றிக் கவலைப்படத்தேவையில்லை என்று அவர் ஆறுதலளித்தார். நமக்கும் மேல் இருக்கும் ஒருவரிடம் நம்பி உன்னை முழுமையாக ஒப்படைத்தாலொழிய எந்த முயற்சியும் பலனளிக்காது என்று அவர் கூறினார். எனக்கு அவர் கூறியது முட்டாள்தனமாகப்பட்டது. நான் கடவுளை நம்புபவன் கிடையாது. ஆனால், என் நடவடிக்கையில் மாற்றம் எதுவும் இல்லாமல் இருந்தால், இருக்கும் சூழ்நிலையில் என் குழந்தைகளின் இறப்புக்கு நானே காரணமாகிவிடுவேன் என்றுமட்டும் புரிந்தது. சரியென்று அவர் சொன்னபடி கடவுளை நம்ப ஆரம்பித்தேன். எனக்கும்மேல் ஒருவன் இருப்பதை ஒத்துக்கொண்டேன்.”


“ஆமாம். அவர் சொன்னதுபோல் மதுவைவிட்டு விலகி இருக்கமுடிந்தது. எனக்கு மேலிருக்கும் சக்தி என்னை மதுவிலிருந்து காப்பாற்றியுள்ளது. ஏழு வருடங்களாக நான் மதுவைவிட்டு விலகி இருக்கிறேன். என்னால் முடிந்திருக்கிறது. காலையில், தெளிவுடன் படுக்கையைவிட்டு எழுகிறேன். ஆரம்பத்தில் இன்றைய நாள் மதுவின்றி கழியுமா என்ற சந்தேகம் இருந்தது. அப்பொழுது எனது ஆலோசகருக்கு ஃபோன் செய்வேன். வாழ்க்கை, திருமணவாழ்வு, வேலை என்று அனைத்தைப்பற்றியும் அவருடன் விவாதிப்பேன். மதுவைப்பற்றி அவருடன் பேசுவதே கிடையாது. அவருடன் பேசி முடித்ததும், எனக்கு நம்பிக்கை வந்துவிடும். தெளிவு பிறந்ததுபோல் உணர்வேன்.”


பங்கேற்பவர்களின் பழக்கங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதன்மூலம் ஆல்கஹாலிக் அனானிமஸ் (A.A) -னால் வெற்றிகாண முடிந்தது என்று அறிவியல் உலகம் கண்டுகொள்வதற்கு பத்து வருடங்கள் தேவைப்பட்ட்து. பழக்க மாற்றங்கள் மூலம் மதுவின் பிடியிலிருந்து வெளிவந்தவர்களில் அதிகமானோர் மீண்டும் மதுப்பழக்கத்துக்கு திரும்புவதில்லை. இருப்பினும் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளினால் (பெற்றோருக்கு புற்றுநோய், மணமுறிவு) சிலர் மதுவை நாடுவதும் ஏற்படுவதுண்டு. பழக்க மாற்றங்கள் வெற்றியடையும்பொழுது, பிரச்சனைகள், எப்படி அந்த வெற்றிப்பாதையிலிருந்து அவர்களை தோல்விக்கு இட்டுச்செல்கிறது என்று மீண்டும் கேள்வி எழுந்தது. அறிவியலாளர்கள் மீண்டும் மதுப்புழங்கிகளின் வாழ்வினை ஆராய்ந்தனர். அப்பொழுது பழக்கமாற்றங்களுடன் இன்னொன்றும் சேர்ந்துகொள்வதனை அவர்கள் கண்டுபிடித்தனர்.


கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட ஆய்வில், A.A -ன் உதவியுடன் மதுவிலிருந்து தப்பியவர்களிடம் பேட்டி எடுக்கப்பட்டது. மீண்டும், மீண்டும் விடுபட்டவர்கள் கூறிய இன்னொரு காரணம் – கடவுள்.


ஆமாம். அவர்களின் கருத்துப்படி அவர்கள் மீண்டதற்கான ரகசியம் – கடவுள்.


ஆராய்ச்சியாளர்களுக்கு இந்த விளக்கம் வெறுப்பை அளித்தது. இறைவனும், ஆன்மீகமும் அறிவியலால் நிரூபிக்க இயலாத அம்சங்கள். இறைவனிடம் நம்பிக்கை இருப்பவர்களுள் குடிகாரர்களாய் இருப்பவர்களும் இருக்கிறார்கள். 2005-ல் பெர்க்லி மற்றும் ப்ரௌன் பல்கலைக்கழகங்களும், அமெரிக்க தேசிய சுகாதார அமைப்புடன் இணைந்து ஆன்மீகம் சம்பந்தமாகவும் பேட்டி எடுக்க ஆரம்பித்தனர். மதுவிலிருந்து விலகி இருப்பதற்கும், கடவுளை நம்புவதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்று அறிய முற்பட்டனர்.


பேட்டிகளில் கிடைத்த விபரங்களை அட்டவணைப்படுத்தியபொழுது, அந்த விபரங்கள் ஒரு குறிப்பிட்ட பாணியில் அமைந்திருப்பதைக் கண்டுபிடித்தனர். மதுவிலிருந்து மீண்டவர்கள், வாழ்க்கையில் சில முக்கியமான பிரச்சனைகளை சந்திக்கும்வரை அவர்களால் மதுவினை நாடாமல் இருக்க முடிந்துள்ளது. ஆனால் பெரிய பிரச்சனையை சந்தித்தபொழுது அனேகர் மீண்டும் மதுவை நாடியிருக்கிறார்கள்.


இருந்தாலும் ஜான் போன்றவர்கள், எத்தகைய பிரச்ச்னை வந்தாலும், மதுவை மீண்டும் தொடவில்லை. அவர்களையும் மீறிய சக்தி என்று அவர்கள் நம்பியுள்ளதால், அவர்களால் பிரச்சனையை மதுவில்லாமல் எதிர்கொள்ளமுடிந்துள்ளது.
இதில கடவுள் என்ற ஒன்று அவர்களைக் காப்பாற்றவில்லை. கடவுளின் மேல் இருந்த நம்பிக்கை அவர்களைக் காப்பாற்றியிருக்கிறது. மது சம்பந்தமாக கடவுல் மீது அவர்கள் கொண்ட நம்பிக்கை, அவர்களுடைய வாழ்வில் அனைத்து அங்கங்களிலும் பரிணமித்துள்ளது. தங்களால் முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்குள் ஊன்றிவிட்டது. நம்பிக்கை என்ற ஒன்று அவர்கள் வாழ்வில் புதுப்பழக்கங்களை ஏற்படுத்தும் முக்கிய காரணியாகிவிட்டது.




- தொடரும்


பூனைக்கு வந்த வாழ்வு :








நாய்க்கு வந்த வாழ்வு :









Thursday, August 21, 2014

பழக்கங்களின் ஆதிக்கம் - அத்தியாயம் – 18

“நம் குழுவினரால் வெற்றி பெறமுடியாது என்று அனைவரும் நம்புவதற்கு இந்த ஆறு காரணங்களையே கூறுகிறார்கள்.” 1996-ல் பக்கனர் குழுவுக்கு பயிற்றுவிப்பாளராக பதவியேற்றவுடன் டங்கி அந்தக் குழுவினரிடம் கூறுகிறார். அமெரிக்கன் ஃபுட்பால் சீசன் ஆரம்பிப்பதற்கு சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற ஆட்டம் அது. ஊடகங்களின் வழியாக கிடைத்த தகவல்களின்படி டங்கி பட்டியலிட்டார். “குழுவின் நிர்வாகம் குழப்பமாக உள்ளது. பயிற்றுவிப்பாளர் புதியவர். விளையாடுபவர்களின் மனநிலை கெடுக்கப்பட்டுவிட்டது. சமூகம் இவர்களைக் கண்டுகொள்வது கிடையாது. விளையாடுபவர்களும் போதுமான திறமையைப் பெற்றிருக்கவில்லை.”


“ஆனால் இவையனைத்தும் மற்றவர்கள் நினைக்கக்கூடிய காரணங்கள் மட்டுமே. இன்னொரு உண்மையையும் கூறுகிறேன். இப்படிக் கூறுபவர்கள் நமக்கு எந்த விதத்திலும் உதவப்போவது கிடையாது.”


விளையாடுபவர்கள் தங்களது திறமையை தன்னிச்சையான செயல்களாக மாற்றுவதற்கான பழக்கங்களை டங்கி எடுத்துரைத்தார். குழுவினர் பல்வேறுபட்ட அனைத்து திறமைகளையும் நினைவுபடுத்திக்கொண்டு விளையாடவேண்டுமென்று அவர் எதிர்பார்க்கவில்லை. சில முக்கியமான விளையாடும் திறமைகளை அவர்கள் வளர்த்துக்கொண்டு, அவைகளை சரியான தருணத்தில் தவறின்றி உபயோகப்படுத்தினாலே போதும் என்று அவர் கூறினார்.


என்னதான் சொன்னாலும் அமெரிக்கன் ஃபுட்பால் விளையாட்டிலும் கொஞ்சமும் பிழையின்றி சரியாக திறமைகளை உபயோகிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. “ஒவ்வொரு விளையாட்டின் பொழுதும், தவறாமல், குழுவில், ஒருவராவது தவறாக விளையாடிவிடுவார்கள்.” ஹெர்ம் எட்வர்ட்ஸ் என்ற டங்கியின் உதவியாளர் கூறுகிறார். “அதிக நேரங்களில் அது மன வலிமையைப் பொறுத்ததே. உடல் திறமையைப் பொறுத்ததல்ல.” என்று தொடர்கிறார். விளையாட்டாளர்கள் பலதரப்பட்ட நுட்பங்களை யோசித்து, அதில் ஏதாவது ஒன்றை உபயோகிக்க வேண்டிய சூழ்நிலை, விளையாடும்பொழுது ஏற்படுகிறது. டங்கி விளையாட்டின்பொழுது இத்தகைய முடிவெடுக்கும் செயல்களை முற்றிலுமாக நீக்கிவிட விரும்பினார். தன்னிச்சையாக இந்த கட்டத்தில், இந்த மாதிரியான முடிவுகளையே எடுக்கவேண்டும் என்ற பழக்கத்தினை அவர்களிடத்தில் ஏற்படுத்த விரும்பினார்.


இதற்காக, முதலில் விளையாட்டாளர்களுடைய தற்போதைய பழக்கங்களை, அவர்களை உணரச்செய்ய வேண்டும். அப்படி உணர்ந்ததும் அவர்களிடம் புதிய செயல்முறைகளை போதித்து செயல்படுத்தவைக்கவேண்டும்.


முதலில் டங்கி தன்னுடைய குழுவினர் எப்படி விளையாடுகிறார்கள் என்பதனை உற்று கவனித்தார். அமெரிக்கன் ஃபுட்பாலில் எதிரணி உறுப்பினர்களும், தன்னுடைய அணியின் உறுப்பினர்களும் எந்த இடத்தில் இருக்கிறார்கள், என்ன செய்யப் போகிறார்கள் என்று கவனிப்பது மிகவும் முக்கியமானது. கண்களால் காண்பதே இங்கு துப்பாக உபயோகப்படுத்தப்படுகிறது. கண்டபிறகு தான் என்னசெய்யவேண்டும் என்று முடிவெடுப்பது அடுத்த செயல். அப்படி முடிவெடுப்பதற்கு, விளையாட்டாளர்களுக்கு சிந்திக்க அவகாசம் தேவைப்பட்டது. அந்த நேரவிரயமும், தவறான முடிவெடுத்தலும், டங்கியின் குழுவினருக்கு வெற்றி பெறும் வாய்ப்பைக் குறைப்பதை டங்கி உணர்ந்தார்.
டங்கியின் முக்கியமான குறிக்கோள் ஆட்டக்காரர்கள் விளையாட்டுத்திடலில் சிந்தித்து முடிவெடுப்பதைக் குறைக்கவேண்டும் என்று இருந்தது. ஒவ்வொரு ஆட்டக்காரர்களையும், இப்படிப்பட்ட தருணத்தில், இந்த மாதிரியான தொடர்முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்று அவர் பயிற்றுவித்தார்.


முன்பு இருந்த துப்புகளைக்கொண்டு அவர்கள் விளையாடும் விதத்தில் மாற்றங்களை ஏற்படுத்தினார். ஆட்டத்தின்பொழுது திடலில் முடிவெடுக்கும் நேரத்தினைக் குறைத்தார். இதனால் குழுவினரின் ஆட்டத்தின் வேகம் அதிகரித்தது. மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக ஒரேமாதிரியான செயல்களை செய்ததால், அவர்களுக்கு இந்த சூழ்நிலையில் இப்படித்தான் விளையாடவேண்டும் என்ற பழக்கம் உருவானது. பழக்கத்தின் காரணமாக அவர்களுடைய வேகமும் அதிகமானது.


ஆரம்பத்தில் பழக்கம் ஒரு நிலைக்கு வருமுன், டங்கி குழுவினர் ஆட்டத்தில் தோல்வியையே தழுவினர். ஊடகங்கள் டங்கி மனோவியல் வழிச்சென்று நேரத்தை விரயம் செய்கிறார் என்று கூற ஆரம்பித்தன. ஆனால் டங்கி குழுவினரின் ஆதிக்கம், தொடர்ந்து வந்த போட்டிகளில் மெல்ல மெல்ல உயரத்தொடங்கியது. பழக்கத்தின் காரணமாக டங்கி குழுவினரின் ஆட்டப்போக்கும், தன்னிச்சையாக இயங்கும் நிலையை அடைந்தது. கடந்த பதினைந்து வருடங்களாக விடாமல் தோல்விகளையே சந்தித்துகொண்டிருந்த பக்கனர் அணியினர், 1999-ல் தொடர்ந்து ஐந்து வெற்றிகளைப்பெற்று அவரகள் விளையாடிய டிவிஷனின் சாம்பியன்ஷிப் பட்டத்தை தட்டிச் சென்றனர்.


டங்கியுனுடைய பயிற்றுவிக்கும் பாணி அமெரிக்காவில் தேசிய அளவில் பேசப்பட்டது. ஊடகங்கள் டங்கியிடம் பேட்டியெடுக்க போட்டிபோட்டனர். மென்மையாகப் பேசும் தன்மையும், ஆன்மீகவாதியுமான டங்கி தொழிலையும் குடும்பத்தையும் சரியான விகிதத்தில் நிர்வகித்துவந்தார். ஊடகங்கள் டங்கியைக் குறித்து அதிக அளவில் அறிந்துகொள்ள முயற்சித்தன. இறுதியில் டங்கிக்கும், பக்ஸ் (பக்கனர்) அணிக்கும் அவர்கள் நினைத்த வெற்றி கிட்டியது.


தொடர்ந்து 2000, 2001 வருடங்களிலும் பக்ஸ் அணியினர் வெற்றியைத் தக்கவைத்துக்கொண்டனர். இறுதி ஆட்டம்வரை, சூப்பர் பவுல் போட்டிகளில், பக்ஸ் அணி, ஒரு முக்கியமான அணியாகக் கருதப்பட்டது. அவர்கள் கனவுகள் அனைத்தும் நனவாகின.
பக்ஸ் அணியினர் மிகவும் சிறப்பான அணியாக உருவெடுத்தாலும் அவர்களுக்கும் பிரச்சனை உருவானது. சாதாரணமாக, டங்கியின் பயிற்சியின் கீழ் அவர்கள் திட்டமிட்டபடி சரியாக விளையாடி வெற்றி பெறுவார்கள். ஆனால் மிகவும் திறமைமிக்க குழுவுடன் விளையாடும்பொழுது, நெருக்கடியான நேரங்களில் அவர்களது அணியும் சிதறத் துவங்கிய நேரங்களும் உண்டு.


2000-ஆம் ஆண்டு சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பிடடெல்ஃபியா அணியுடன் மோதி, 21-க்கு 3-புள்ளிகளை மட்டுமே எடுத்து அவர்கள் படுதோல்வி அடைந்தனர். அதுபோலவே 2001-லும் இறுதிப்போட்டியில் ஈகிள்ஸ் அணியினை எதிர்த்து போட்டியிட்டு 31-க்கு 9 என்ற புள்ளிக்கணக்கில் தோற்றனர்.


“எங்கள் அணி எவ்வளவுதான் பயிற்சி பெற்று பழக்கத்தை உருவாக்கியிருந்தாலும், நெருக்கடியான சூழ்நிலையில் பழக்கத்தை விட்டுவிடுகிறார்கள்.” டங்கி தொடர்கிறார். “ஆட்டக்கார்களிடம் கேட்டதற்கு, தோற்றுவிடுவோம் என்று எண்ணியதால் நான் பழக்கத்திலிருந்து மாறுபட்டு முயற்சி செய்தேன் என்று சிலர் கூறினர். என்னை எல்லோரும் கைவிட்டுவிட்டதுபோல் உணர்ந்தேன் என்றும் சிலர் கூறினர்.” மொத்தத்தில் பழக்கம் காரணமாக சரியாக விளையாடினாலும், நெருக்கடியான நேரத்தில் பழக்கத்தைக் விட்டு அவர்கள் விலகிவிட்டார்கள். அதுவும் தோல்விக்குக் காரணமாக அமைந்திருக்கலாம்.


2000, 2001-ல் தோல்வியடைந்த பிறகு டங்கி, பக்ஸ் குழுவினரின் பயிற்றுவிப்பாளர் பணியிலிருந்து விலக்கப்பட்டார். இருந்தாலும் டங்கியின் உதவியுடன் மேற்கொண்டிருந்த அதே பழக்க முறைகளை உபயோகித்து பக்ஸ் குழுவினர் சூப்பர் பவுல் சாம்பியன்ஷிப்பை அடுத்த வருடத்தில் வென்றார்கள். குழுவின் பயிற்றுவிப்பாளர் லம்பார்டியும் குழுவினருடன் சேர்ந்து வெற்றிக்கோப்பையைப் பெற்றுக்கொண்டார். 


டங்கி தோற்றாலும், பழக்கம் பக்கனர் அணியினரைக் கைவிடவில்லை.




- தொடரும்



கண்டு அதிர காணொளி :











Thursday, August 14, 2014

பழக்கங்களின் ஆதிக்கம் - அத்தியாயம் – 17




முதல் ஆலோசனை அமர்வு முடிந்தபிறகு, ஆலோசகர் மாண்டிக்கு ஒரு வேலையை செய்யுமாறு பணித்தார். ஒவ்வொருமுறை நகம் கடிக்க வேண்டுமென்று விரல்களில் பதற்றம் ஏற்பட்டதும் அவற்றை கொடுக்கப்பட்டிருக்கும் கார்டுகளில் குறித்து வைக்குமாறு கூறினார். மறுவாரம் மாண்டி ஆலோசனைக்கு வந்தபொழுது மாண்டி 28 கார்டுகளில் குறித்து வைத்துள்ளதாகக் கூறினார். அப்படிக் கூறும்பொழுது, விரல்களில் பதற்றம் ஏற்பட்டவுடன் தான் நகம் கடிக்க ஆரம்பித்துவிடுவதை அவள் உணர்ந்திருப்பது தெரிந்தது. மேலும் வாரத்துக்கு எத்தனை முறை நகம் கடித்திருக்கிறாள் என்பதற்கான விபரங்களும் அவளிடம் இருந்தது.


இரண்டாவது அமர்வில் “எதிர்க்கும் வினை” ஒன்றினை ஆலோசகர் மாண்டிக்கு பயிற்சியாக அளித்தார். எப்பொழுதெல்லாம், விரல்களில் நகம் கடிக்கவேண்டும் என்ற பதற்றம் தோன்றுகிறதோ, அப்பொழுதெல்லாம் உடனே கைகளுக்கு வேறு வேலை கொடுக்கவேண்டும். கைகளை பாக்கெட்டுகளில் வைத்துக்கொள்ளலாம். அல்லது பென்சிலைக் கையில் எடுத்துக்கொள்ளலாம். நகங்களைக் கடிப்பதற்கான சந்தர்ப்பங்களைத் தவிர்த்துவிடவேண்டும். உடனே கரங்களுக்கு ஏதாவது வேலை கொடுக்கவேண்டும். கரங்களைத் தடவிக்கொடுப்பதோ, நெட்டி முறிப்பதோ என்று ஏதாவது வேலையைத் தரவேண்டும் என்று ஆலோசகர் பரிந்துரைத்தார்.


துப்புகளையும், வெகுமதிகளையும் மாறாமல் வைத்துக்கொண்டு செயல்முறையைமட்டும் மாற்றுவதற்கு அவர் பரிந்துரைத்தார்.


பழைய பழக்க வளையம்






புதிய பழக்க வளையம்



இரண்டாவது அமர்வு முடிந்தபொழுது, ஆலோசகர் மாண்டிக்கு, மற்றுமொரு வேலையையும் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். அதாவது விரல்களில் பதற்றம் ஏற்படும்பொழுது கொடுக்கப்படும் கார்டுகளில் குறித்துக்கொள்வதுடன், எதிர்க்கும் வினையினை உபயோகித்து ஒவ்வொரு முறை வெற்றிகொள்ளும் பொழுதும், அவற்றையும் ஒரு கார்டில் பதிந்துகொள்ளும்படி அவர் கேட்டுக்கொண்டார்.


ஒரு வாரம் கழித்து, அடுத்த ஆலோசனை அமர்வுக்கு வந்தபொழுது, பத்துமுறை விரல்களில் பதற்றம் ஏற்பட்டதற்கு, மாண்டி மூன்று முறை மட்டுமே நகம் கடித்திருப்பது தெரியவந்தது. அதாவது பத்துக்கு ஏழு என்ற விகித்த்தில் மாண்டி தற்சமயம் நகம் கடிக்கும் பழக்கத்திலிருந்து மீண்டிருக்கிறார். அப்படி மீண்டதற்காக, அவர் அழகு நிலையத்துக்குச் சென்று நகப்பூச்சு செய்துகொண்டார்.  அதை அவருக்கு வெகுமதியாக அளித்துக்கொண்டார். இப்படியாக ஓரிரு மாதங்களில் அவர் நகம் கடிக்கும் பழக்கத்திலிருந்து முழுவதும் மீண்டுவிட்டார். மாண்டியினுடைய எதிர்க்கும் வினை, இப்பொழுது தன்னிச்சையான செயலாகிவிட்டது. அவருடைய நகம் கடிக்கும் பழக்கம் இன்னொரு பழக்கமாக மாறிவிட்டது.



“ஒரு பழக்கம் உருவாவதற்கான தூண்டுகோலையும் மற்றும் வெகுமதியையும் புரிந்துகொண்டுவிட்டாலே, அது கிட்டத்தட்ட பாதியளவு பழக்கத்தை மாற்றிவிட்டது போன்றதாகும்” என்று பழக்க மாற்று நிபுணர் நேதன் அஸ்ரின் கூறுகிறார். “இது மிகவும் கடுமையானதாகத் தோன்றும். ஆனால் உண்மையில் மூளையில் பதிந்தவைகளை நம்மால் மாற்ற முடியும். நாம் மாற்றத்தை ஏற்படுத்துவதற்குத் தேவையான செயல்களை மேற்கொண்டாகவேண்டும்.” என்றும் அவர் கூறுகிறார்.


இன்று பழக்க மாற்ற ஆலோசனைகளும், பயிற்சிகளும் உடலில் நடுக்கங்கள், மன அழுத்தம், மன உளைச்சல், புகைப்பழக்கம், சூதாட்டப்பிரச்சனைகள், உறக்கத்தில் படுக்கையில் சிறுநீர் கழித்தல், மனதை அலைக்கழிக்கும் சீர்கேடுகள் மற்றும் பிற நடத்தைப் பிரச்சனைகளையும் குணப்படுத்தப் பயன்படுகிறது. இதற்கான நுட்பங்கள், பழக்கங்கள் உருவாவதற்கான அடிப்படைகளை உபயோகித்து வரையறுக்கப்பட்டுள்ளன. உண்மையில் பழக்கம் ஏன் உண்டானது என்று ஆராய்வதற்கு முன், சில குறிப்பிட்ட தூண்டுதல்களால்தான் அவை ஆரம்பமானது என்று நாம் அறிவதில்லை. கைகளில் ஏற்படும் பதற்றம்தான் நகம் கடிக்கத் தூண்டியதை மாண்டியும் உணரவில்லை. அந்தப் பதற்றத்துக்கு எதிர்வினையை செயல்படுத்தியதால்தான் அவளால் அந்தப் பழக்கத்திலிருந்து மீளமுடிந்த்து.


வேலை நேரத்தில் ஏதாவது நொறுக்குத்தீனி சாப்பிட விரும்புகிறீர்கள். ஏன்? ஒரே வேலையை தொடர்ச்சியாக செய்வதனால், வேலையில் விருப்பம் குறைவதனாலா? இல்லை பசியினாலா? முதலாவது காரணம் எனறால், அந்த நேரத்தில் வேறு ஏதாவது செய்ய முயலுங்கள். யாரிடமாவது பேசுங்கள். சிறிய நடையினை மேற்கொள்ளுங்கள். அந்த நேரத்தில், சரியாக திசை திருப்பும்வகையில் ஏதாவது செய்யுங்கள். நொறுக்குத்தீனி சாப்பிடும் பழக்கத்திலிருந்து வெளிவர அதுவே முதல்படி.











நீங்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த விரும்பினால், உங்களை நீங்களே இந்தக் கேள்விகளைக் கேட்டுப்பாருங்கள். நீங்கள் நிக்கோட்டினை விரும்புவதனால் புகைப்பிடிக்கிறீர்களா? ஒரு புத்துணர்ச்சி கிடைப்பதனால் புகைப்பிடிக்கிறீர்களா? நேரத்தை நிரப்பப் புகைக்கிறீர்களா? அல்லது அடுத்தவர்களுடன் பழகுவதற்காக புகைக்கிறீர்களா? புகைப்பவர்களிடம் மேற்கண்ட டஜனுக்கு மேற்பட்ட சோதனைகளில், புகைத்தலுக்கான தூண்டுகோலையும், வெகுமதியையும் கண்டுகொண்டு சரியான எதிர்வினைகளைக் கொண்டு அவர்களால் அந்தப் பழக்கத்திலிருந்து வெளியேற முடிந்தது தெரியவந்துள்ளது.











தூண்டுகோல்களையும் வெகுமதிகளையும் சரியாகக் கண்டுகொண்டு, செயல்முறையை மட்டும் மாற்றுவதன்மூலம் நாம் பழக்க மாற்றத்தை ஏற்படுத்த முடியும். ஆமாம். குறைந்தபட்சம் அதிகமான பழக்க மாற்றங்களுக்கு சாத்தியம் என்றாவது இப்பொழுது குறிப்பிடமுடியும். இருந்தாலும், இத்தகைய பழக்க மாற்றங்களுக்கு நம்பிக்கை என்பது மிகவும் இன்றியமையாதது.



- தொடரும்




கண்டு வியக்க காணொளிகள்:

மீன் துடிப்பதை காண சகிக்காத ஒரு உயிர்.







செஞ்சோற்றுக்கடன்.











Thursday, August 7, 2014

பழக்கங்களின் ஆதிக்கம் - அத்தியாயம் – 16

தூண்டுதல்களையும் வெகுமதிகளையும் மாற்றாமல், எப்படி செயல்முறைகளை மட்டும் மாற்றுவதன் மூலம், பழக்கங்களை மாற்றமுடிகிறது என்பது 2007-ல் ஜெர்மன் நரம்பியல் நிபுணர் முல்லர் செய்த சோதனைமூலம் நிரூபணம் ஆனது. மதுப்பழக்கத்திலிருந்து வெளிவர பலமுறைகள் முயன்ற ஐந்துபேர்களை முல்லர் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டார். அவர்களுடைய Basal ganglia – (மூளையில் பழக்கத்தை நினைவில் நிறுத்தும் பகுதி). அருகில் உணர்வு கருவிகளைப் பொருத்தி (MIT ஆய்வாளர்கள் எலிகளுக்கு பொருத்தியதைப் போல), மது அருந்தவேண்டிய ஏக்கம் வந்ததும் அந்த உணர்வு கருவிகளிலிருந்து தேவையான அளவு மின்சாரம் தன்னிச்சையாக பாய்வதுபோல் வடிவமைத்தார். 

அந்த மின்சாரம் மதுப்புழங்கிகளின் மூளையில், வெகுமதி அடையும் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தியது. அவர்களிடம் வேண்டுமென்றெ மது அருந்துவதற்கான தூண்டுதலை அவர் ஏற்படுத்தினார். சாதாரணமாக அப்படிப்பட்ட நேரங்களில் அவர்களால் மது அருந்தாமல் இருக்க முடிந்ததில்லை. ஆனால், மூளையில் செலுத்தப்பட்ட மின்சாரத்தின் விளைவால், அவர்களுடைய பழக்கத்தில் மாற்றம் ஏற்பட்டது. அவர்களால் மது அருந்தாமல் இருக்க முடிந்தது.


“மூளையில் மின்சாரம் பாய்ச்சப்பட்டதும் மது அருந்தும் எண்ணம் சுத்தமாக ஏற்படவே இல்லை.” என்று ஒருவர் கூறினார். ஆனால் அந்த மின்சாரத்தை நிறுத்தியவுடன் மது அருந்தும் ஏக்கம் வந்துவிட்டதாக அவர் கூறினார் என்றும் முல்லர் குறிப்பிடுகிறார்.


ஆனால், மதுப்புழங்கிகளின் மூளை நரம்பியலை கட்டுப்படுத்துவதன்மூலம் ஏற்படும் மது அருந்தாத நிலை நாள்பட நிலைக்கவில்லை. சோதனைக்கு எடுத்துக்கொண்ட ஐவரில் நால்வர் மீண்டும் மது அருந்தும் பழக்கத்திற்கு திரும்பிவிட்டார்கள். வாழ்க்கையில் ஏற்படும் இக்கட்டான நிலை, அவர்களை பழையபடியே மதுவுக்கு அடிமையாக்கியது. மது அருந்தாமல் அவர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. பிரச்சினைகளை அவர்கள் மதுவின் மூலமாகவே சந்திக்க முற்பட்டார்கள். ஆனால் பிரச்சினைகளை மதுவைத் தவிர வேறு விஷயங்களால் சரிசெய்ய முயன்றவர்கள், மதுப்பழக்கத்திலிருந்து மீண்டார்கள். 


ஆனால் ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்ஸில் சேர்ந்தவர்கள், மதுப்பழக்கத்திலிருந்து முற்றிலும் மீண்டார்கள். பன்னிரெண்டு வயதிற்கே மதுப்பழக்கத்திற்கு அடிமையான இருவர் A.A-ல் சேர்ந்தபிறகு, இப்பொழுது கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளாக மதுவைவிட்டு சுத்தமாக விலகி இருக்கிறார்கள். முல்லரின் சோதனைகளில் இருந்தவர்களுக்கு A.A-ன் மூலம் உதவி அளிக்கப்பட்டது. A.A-யினுடைய செயல்முறையின் மூலம் அவர்கள் மதுப்பழக்கத்திலிருந்து மீண்டுள்ளார்கள்.



பழக்கங்களின் முதன்மையான விதி இங்கே சோதனையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மூளையில் ஏக்கங்களை ஏற்படுத்தும் பகுதிகளை அறுவை சிகிச்சையின்மூலம் மாற்றினாலும் பழக்கங்களை நீண்ட நாட்களுக்கு கட்டுப்படுத்த முடியவில்லை. ஆனால் பழைய தூண்டுகோலையும் வெகுமதியையும் மாற்றாமல், செயல் முறையைமட்டும் மாற்றுவதன்மூலம் பழக்கத்தை மாற்றமுடியும் என்று இங்கு புலனாகிறது. 


பழைய தூண்டுகோலும், வெகுமதியும் அறுவை சிகிச்சைக்குப் பின்னரும் வெளிவரும் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன. “சில மதுப்புழங்கிகளை அறுவைசிகிச்சையின் மூலமே குணப்படுத்தமுடியும் இருப்பினும் அவர்களும் வாழ்க்கையில் பிரச்சனையை எதிர்கொள்ளுவதற்கு ஏதேனும் புதுவழியைக் கற்றுக்கொள்வது மிகவும் அவசியம்.” என்று டாக்டர் முல்லர் கூறுகிறார்.



A.A- இத்தகைய புதுவழிகளையே கற்றுத்தருகிறது.  A.A-ன் வெற்றியையும், அதன் நுட்பத்தையும் புரிந்துகொண்ட அறிவியலாளர்கள் அதே மாதிரியான திட்டங்களை செயல்படுத்தி, மக்களை புகை, மது, அதீத உடல் உணர்வு போன்ற தீயப்பழக்கங்களிலிருந்து மீட்க வழிகளை வகுத்துள்ளனர்.


*********


மாண்டி என்ற அந்த 24 வயது மாணவி, மிசிசிபி ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் அமைந்திருக்கும் மனநல ஆலோசனைக்கான அறையில் நுழைந்தார். வருடம் 2006, கோடைக்காலம். மாண்டிக்கு நகம் கடிக்கும் கெட்டபழக்கம், குழந்தைப்பருவத்திலிருந்தே இருக்கிறது. நகக்கணுக்களில் ரத்தம் வருமளவுக்கு, நகங்களைக் கடித்துக்கொண்டிருப்பது அவள் வழக்கம். தன்னுடைய புண்ணான விரல்களை மற்றவர்கள் பார்த்துவிடக்கூடாது என்று அவள் முடிந்தவரை கைகளை சட்டைப்பைகளில் மறைத்து வைத்துக்கொள்வாள். எவ்வளவுதான் முயற்சி செய்து நகம் கடிக்கும் பழக்கத்திலிருந்து மீள நினைத்தாலும், அவளால் அது கட்டுப்படுத்த முடியாத ஒன்றாகவே இருந்தது. விரல்களில் நாற்றமடிக்கும் நகப்பூச்சு என்று சகலவிதமான பொருட்களையும் அவள் முயற்சித்து தோல்வியையே சந்தித்திருக்கிறாள். படிக்கும்பொழுது, தொலைக்காட்சி பார்க்கும்பொழுது என்று தன்னை மறந்த நிலையில் அவள் இருக்கும்பொழுது, அவளையறிமாமல் அவள் நகம் கடிக்க ஆரம்பித்துவிடுவாள்.


“பழக்கங்களை மாற்றும் பயிற்சி” என்ற துறையில் டாக்டர் பட்டத்துக்கு படித்துக்கொண்டிருந்த ஒரு மாணவர், மாண்டியை இந்த மனநல ஆலோசனைக்கு பரிந்துரைத்திருக்கிறார். பழக்க மாற்றத்தின் பொன்விதியைப்பற்றி ஆலோசனை தரும் அந்த மனோவியல் நிபுணருக்கு நன்கு தெரியும். பழக்கத்தை மாற்றுவதற்கு புதிய செயலை அந்த பழக்க சுழற்சியில் அறிமுகப்படுத்த வேண்டுமென்று அவருக்கு நன்கு தெரியும்.


“நகங்களைக் கடிப்பதற்காக, விரல்களை உன் வாய்க்கு அருகில் எடுத்துச் செல்லும் பொழுது, உன் மனநிலை எப்படியிருக்கும்?” மனோவியலாளர் வினவினார்.


“விரல்களில் ஒருவிதமான பதற்றம் தோன்றும். நகங்களைக் கட்டைவிரலால் துழாவி, துருத்திக்கொண்டிருக்கும் நகத்தைத் தேடுவேன். அப்படிக்கிடைத்த்தும் அதனைக் கடிக்க ஆரம்பிப்பேன். ஆரம்பித்துவிட்டால், ஒவ்வொரு நகமாகத் தொடருவேன். நிறுத்துவதற்கு எனக்கு மனமிருக்காது.”


நோயாளிகளிடம் பழக்கத்திற்கான தூண்டுதலைப் புரிய வைப்பது “நிலையை அறியும் பயிற்சி” ஆகும். இது பழக்கத்தை மாற்றுவதற்கான முதல்படி ஆகும். மாண்டியின் விரலில் ஏற்படும் பதற்றம் அவளது நகம் கடிக்கும் பழக்கத்திற்கான தூண்டுதல் (துப்பு) ஆகும்.
“ஏன் தனக்கு இந்தப்பழக்கம் வந்தது என்பதற்கான தூண்டுதலை உணராமலேயே, மக்கள் பழக்கத்துக்கு ஆளாகிவிடுகின்றனர்.” என்று ப்ராட் டுஃப்ரேன் கூறுகிறார். இவர்தான் மாண்டிக்கு ஆலோசனை சிகிச்சை அளித்தவர்.


அடுத்து, ஏன் நகங்களைக் கடிக்கிறாய் என்று அவர் மாண்டியிடம் கேட்டார். ஆரம்பத்தில் அவளால் எந்தக் காரணத்தையும் குறிப்பிட முடியவில்லை. அவர்கள் உரையாடலின் மூலமாக, செய்கின்ற செயலில் ஈடுபாடு குறைந்தால் அவள் நகத்தைக் கடிக்க முற்படுவதை அவர் கண்டுகொண்டார். தொலைக்காட்சி பார்க்கும் பொழுதும், வீட்டுப்பாடங்களை செய்யும் பொழுதும் அவள் நகம் கடிப்பதை ஆலோசனை அனுபவத்தில் அவர் தெரிந்துகொண்டார். நகங்களைக் கடித்ததும், தன் வேலை முழுமையடைந்த திருப்தி அடைந்ததாக அவள் கூறினாள். இங்கு, அந்த திருப்தியே அவளுக்குக் கிடைத்த வெகுமதியானது.










 -தொடரும்




கண்டு ரசிக்க ஒரு காணொளி:

கடல் நாய்க்குத் தானும் சர்ஃபிங்க் செய்ய ஆசை. இந்தக் கடல் நாய் வளர்ப்பு பிராணி கிடையாது என்பதும் ஆச்சர்யம்தான்.






Math captured this GoPro footage of a baby seal climbing on his board and playing with him and a friend in the water.

We caught up with Matt to get the low down on what happened:
“Me and my friend Andrew were out enjoying some summer waves when this little guy came along and scared the hell out of Andy because we didn’t know what it was! It nudged his foot from underneath,” he explained.

After an hour or so of playing around with the pup, the guys decided to head back to the shore, but the little guy hadn’t finished and tried to follow them up the beach. “When we got home Andy rang the local marine wildlife authority to make them aware of what occurred just in case the seal was unwell… He didn’t seem unwell when he was surfing in like a pro!”